இது
என்னை பற்றியதல்ல, என் தந்தையை பற்றியது. அவரை காயப்படுத்தியவனின் நிகழ்வை
பற்றியது. 'எம் தந்தை, எம் தந்தை' என்று எல்லா மகன்களும் தாம் தந்தையாகிய
பிற்ப்பாடே பெருமை பீத்திக்கொள்வார், அந்த
இனத்தை சார்ந்தவர்களில் நிச்சயமாக எனக்கும் ஒரு பலத்த பங்குண்டு.
அழகான வீடென்று சொல்லிவிட முடியாது, நிறைய
அழுக்கு, நிறைய நாற்றம் இதற்க்கிடையேதான் எங்கள் குடிசை இருந்தது. எங்கள்
இருப்பிடத்தைக் காட்டிலும், என் தந்தையின் வேலையானது இந்த அழுக்குநிறைந்த சென்னையை
சுத்தப்படுத்துதலில் இருந்ததனால் அதைக்காட்டிலும் அழுக்காகத்தான் இருந்தது. என்
தந்தை இந்த நகரத்தை தூய்மைப்படுத்துதலில் காட்டிய அக்கறையை, எங்கள்
இருப்பிடத்திற்கு காட்டாதது அவரது தவறில்லையன்று எனக்கு தாமதமாகவே புரிந்தது.
அன்றிரவு 11:30, வழக்கம்போல் என்தந்தையின்
வரவை எதிர்பார்த்து ஏமாந்து தூங்கிவிட்டேன். கலையில் சீக்கிரமாக எழுந்தால்
மாத்திரமே என் தந்தையை என்னால் சந்திக்கமுடியும், இப்படியொரு நெருக்கமற்ற
சூழலில்தான் எங்கள் மகன் தந்தை உறவு வளர்ந்தது, நினைவு தெரிந்த காலம்தொட்டே நான்
என் தந்தையை "அப்பா" என்று சொல்லி அழைத்ததேயில்லை, ஏன் எனக்கு அந்த
சந்தர்பம்கூட கிடைக்கவில்லை. ஆகவே என்மேல் முழுத்தவறையும் உங்களால் திணித்துவிட
முடியாது. எப்படியும் அன்றிரவு 1 அல்லது 2 மணிக்கு வந்திருப்பார். காலை 6
மணிக்கெல்லாம் நான் கண்விழிக்கும் முன்பே சென்றும்விடுவார். எனக்கும் என்
தந்தைக்குமிடையே இரண்டு விஷயங்கள் மாத்திரமே எங்கள் உறவை வலுவுப்படுத்த இருந்தது.
ஓன்று நான் மிகவும் விரும்பியதென்று தன் தினக்கூலியில் பாதியை செலவழித்து எனக்காக
தினமும் வாங்கிவரும் ஆப்பிள், மற்றொன்று ஞயிற்றுக்கிழமை.
இந்த ஞயிற்றுக்கிழமைகழில் மட்டும்தான் நான்
என் தந்தையை சந்திக்க முடிந்தது. மற்ற நாட்களில் என் பள்ளி எனக்கு முட்டுக்கட்டையாகவே
இருந்தது. என் தந்தையை பார்க்க இன்னும் நான்கு நாட்களாகும் அதாவது ஞயிற்றுக்கிழமை
வருவதற்கு, என்று எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு காணக்கிடைத்தது ஒரு பெரும்
மகிழ்ச்சியோடு ஒரு அதிர்ச்சி. என் படுக்கைக்கு அருகே தினமும் நான் கண்விழித்ததும்
பார்ப்பது என் தந்தை எனக்காக வாங்கி வைத்திருக்கும் ஆப்பிளைத்தான். ஆனால் அந்த
ஆப்பிள் அங்கே இல்லையென்றால், வீட்டில் என் தந்தையுள்ளார் என்றுதான் அர்த்தம்.
படுக்கையைவிட்டு மெதுவாக எழும்பி, என் தந்தையை சுற்றும் முற்றும் துலாவினேன். அவர்
வருகைக்கு அடையாளமாக அவரது அழுக்குச்சட்டை கிடந்தது. எதுவும் அறியாதவனாய்
பல்துலக்க செல்வதுபோல் இயல்பாய் வீட்டின் பின்புறம் சென்றேன். அவர் திரும்பிய்
நின்று, அவரது அழகான வெள்ளைத்தாடியை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். இதை
பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமலே நிஜமாக பல்துலக்க ஆரம்பித்தேன். அவர்
என்னை கவனித்துவிட்டு என் அருகேவர நெருங்கினார், நான் ஒன்றுமே ஆறியதவனாய்
பல்துலக்கும்போல் பாவித்தேன்.
"டேய், ரங்கு" என்று என்
தலையையும் வருடிக்கொடுத்தார், எனக்குள் எங்கோ பறப்பது போலத்தான் இருந்தது.
தூய்மையான காதலர்கள் முதல் முத்தத்தை பகிர்ந்துக்கொள்ளும்போது கிடைக்கும் இன்பம்
போன்றுதான்.
"சீக்கிரமா கெளம்பு, நீ ஆசப்பட்ட
மாதிரியே அந்த இங்கிலீஷ் பேசுற பள்ளிகொடதுல சேர்த்து விட்ரேன்" என்றார்
சிரித்தபடியே. நான் என்றோ ஒருநாள் என் அம்மாவிடம் இதை கூறினேன், " எனக்கு
அந்த இங்கிலீஷ் பேசுற பள்ளிக்கொடத்துல படிக்க ஆச அம்மா" இது எங்கள் தகுதிக்கு
மீறியதேயன்று தெரிந்தும் என் தந்தை என் ஆசைக்கு அதாவது பேராசைக்கு துணைபோகிறார்
என்று எண்ணியதும் என் கண்கள் சிவக்க ஆரம்பித்தன., சோகத்தை என் தந்தையின்முன் காட்ட
விரும்பாது, அங்கிருந்து ஏதோ வெறுப்போடு இருப்பவனைப்போல் பாவித்து ஓடிவிட்டேன்.
"டேய், அந்த பள்ளிகொடதுல ஏதோ பரிட்ச
வச்சுதான் எடுப்பாங்கழாம்" என்றார் என் அம்மா எனக்கு சட்டையை மாட்டிவிட்டபடி.
எனக்கு சற்றும் கிலி தோன்றவில்லை மாறாக பெரும் மகிழ்ச்சியே தோன்றியது. என்னுடைய
பலநாள் ஆசையிது ஆனால் இது நிறைவேறுமென்று நம்பிக்கை எனக்குள் ஒருபோதும்
இருந்ததேயில்லை, ஆனால் இன்று நிகழ்த்திவிட்டார் என் தந்தை. அவரை எண்ணி
பெருமைப்பட்டுக்கொண்டே அந்த சிவந்த வெயிலில் அவர் மிதிவண்டியில் என்னை சுமந்தபடி
சென்றார். அன்று என் தந்தையை இறுக்க கட்டிபிடித்து அவர் சட்டையிலுள்ள வியர்வை
வாசத்தை முகர்ந்தபடி பள்ளி வளாகத்தினுள் நுழைந்தேன். எனக்குள் அதுவரையல்லாத
பதட்டம் அப்போதுதான் தொற்றிக்கொண்டது. எப்படி அந்த பரிட்சையை எழுதுவேன் என்று
பயந்துபோய் இருந்தேன். நல்லவேளை என் தாய் தந்தை படித்திருக்கவில்லை என்று காரணம்
கூறி என்னை அந்த தமிழ் பேசத்தெரியாத பள்ளிகூடத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனக்கு
எந்தவொரு கவலையும் தோன்றவில்லை மாறாக மகிழ்ச்சியுற்றேன். ஆனால் என் தந்தை இதை
எதிர்பார்த்திருக்கமாட்டார், மனமுடைந்துபோனார். எனக்கு ஆறுதல் கூறுவதாக எண்ணி
என்னவெல்லாமோ கூறினார் கண்கள் கலங்கியபடி. அப்போதுதான் உண்மையில் எனக்கு கவலை
தொற்றியது, என் தந்தையை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டுமென்று மனதளவில்
தோன்றியது என்னை அறியாமலே, " அப்பா எனக்கு இந்த ஸ்கூல் புடிக்கல அப்பா, இபோ
படிக்கிற ஸ்கூல் தான் நல்லயிருக்கு" என்று உளறிவிட்டேன். என் தந்தையின்
முகத்தை அப்போது பார்க்க நான் தவறிவிட்டேன் என்பதைவிட கூச்சப்பட்டுவிட்டேன் என்று
எடுத்துக்கொள்ளலாம். அவர் கண்டிப்பாக பெரும் மகிழ்ச்சிகொண்டிருப்பார். அந்த
மிதிவண்டிப்பயணம் மறக்க முடியாத ஒரு விலைமதிப்பற்ற நிகழ்வானது. என் தந்தையின்
அழுக்குச்சடையிலிருந்து வரும் வியர்வை வாசம் ஏனோ என் தந்தையோடு நெருங்கியிருக்கும்
உணர்வை எனக்கு தந்தது. எம் தந்தை எம் தந்தை என்று இன்றுவரை நான் பெருமை
பீத்திக்கொள்ளும் போதெல்லாம் என் தந்தையின் அழுக்குச்சட்டையை அணிந்தபடி அவரை
இறுக்க கட்டியதாக எண்ணியபடி அவர் இல்லாத இந்த வாழ்க்கையை இப்போதும்
கடத்திச்செல்கிறேன்.
" நாங்கள் பேசிய வார்த்தைகள்
கொஞ்சமே,
எங்களோடு பேசியது பல மௌனங்களே"